சென்னை: காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் மாயி சுந்தர் (50), நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு, தனது சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென்று கல்லீரல் மற்றும் மூளை செயலிழந்தது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் சென்றபோது, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 2.45 மணியளவில் திடீரென்று மரணம் அடைந்தார். அவருக்கு திருமணம் ஆகவில்லை.
‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘மாயி’, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘குள்ளநரி கூட்டம்’, ‘ஸ்கெட்ச்’, ‘மிளகா’, ‘சதுரங்க வேட்டை’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’,‘கட்டா குஸ்தி’, ‘கட்சிக்காரன்’, ‘உயிர் தமிழுக்கு’ உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள மாயி சுந்தரின் திடீர் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மாயி சுந்தரின் உடல் நேற்று மாலை மன்னார்குடியில் தகனம் செய்யப்பட்டது.